காரைக்காலில் நீண்டகாலமாக ஒழிக்க முடியாத பிரச்சினையாக கொசுத்தொல்லை
2/05/2025
காரைக்காலில் நீண்டகாலமாக ஒழிக்க முடியாத பிரச்சினையாக கொசுத்தொல்லை இருந்து வருகிறது. கழிவுநீர் பாதை தூர் வாராமல் இருப்பதே இதற்கான காரணம். இம்மாத கடைசியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கிய உடன் மேலும் கொசு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

காரைக்கால் ஜீவானந்தம் வீதி கிழக்கு பகுதியில் கழிவுநீர் வடிவாய்க்கால் நீண்ட காலமாக தூர்வாராத காரணத்தால் அங்குள்ள தோட்டம் ஒன்றில் அப்பகுதி கழிவுநீர்கள் தேங்கி சிறிய ஏரி போல் காட்சியளிக்கிறது. அப்பகுதியில் கொசு உற்பத்தி வெகுவிமர்சையாக நடந்து வருகிறது. அப்பகுதியே காரைக்காலில் கொசு உற்பத்தி செய்வதில் முதல் இடமாக திகழ்கிறது.
அந்த கழிவு நீரில் குப்பைகூலங்கள், தேங்காய் மட்டைகள் , பழைய டயர்கள் கிடப்பதால் “டெங்கு கொசு” உற்பத்திக்கு ஏதுவாக உள்ளது. காரைக்கால் மாவட்ட நிர்வாகம் ஏரிபோல் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றி அடைப்பட்டு இருக்கும் கழிவுநீர் வாய்க்காலை தூர்வார நடவடிக்கைகள் எடுப்பதுடன் அப்பகுதி மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுக்க காமராஜர் மக்கள் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
