பள்ளி மாணவி லாரி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்துக்குப் பின்னரும் சம்பவங்கள் தொடர்வது வேதனை

24/05/2025

சென்னை கொளத்தூர், பொன்னியம்மன்மேடு தெருவைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி சௌமியா, ஜூன் 18 அன்று தாயாருடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றபோது, பேப்பர் மில்ஸ் சாலையில், பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியதால் உயிரிழந்தார். பெற்றோர் கண் முன்னே ஒரு குழந்தை உயிரிழப்பது, வாழ்நாள் முழுவதும் பெற்றோருக்கு வேதனையைத் தரக்கூடியது. இந்த விபத்தில், லாரி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நெரிசல் மிகுந்த காலை நேரத்தில் தண்ணீர் லாரியை அனுமதித்த செம்பியம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், புளியந்தோப்பு போக்குவரத்துக் காவல் உதவி ஆணையர் மீது துறைரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவை எல்லாமே ஓர் உயிரிழப்பு ஏற்பட்ட பிறகு மேற்கொள்ளப்படும் வழக்கமான நடவடிக்கைகள் என்றே கருத வேண்டியிருக்கிறது.

இந்த விபத்துக்குப் பிறகு பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரும் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கக் கூடாது; பள்ளி தொடங்கும். முடியும் நேரங்களில் போக்குவரத்தைச் சீர்செய்யும் பணியில் காவலர்கள் கட்டாயம் ஈடுபட வேண்டும்: காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களை அனுமதிக்கும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகரக் காவல் ஆணையர் தெரிவித்திருக்கிறார். சென்னை கோவிலம்பாக்கத்தில் 2023இல் தாயுடன் பள்ளிக்குச் சென்ற 10 வயதுப் பள்ளி மாணவி லாரி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்துக்குப் பின்னரும் இப்படியான சம்பவங்கள் தொடர்வதுதான் வேதனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *