மருத்துவர்கள் போராட்டம் வெற்றி பெறட்டும்
11/06/25
மருத்துவர்கள் போராட்டம் வெற்றி பெறட்டும்
“சொன்னதையும் செய்கிறோம்; சொல்லாததையும் செய்கிறோம்” என்று தனக்குத்தானே மகுடம் சூட்டிக் கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது கொடுத்த, தற்போது நிறைவேற்ற மறந்த வாக்குறுதிகளில் ஒன்றுதான் இன்று அரசு மருத்துவர்களை போராட்டக் களத்தில் நிறுத்தி உள்ளது; சேலத்தில் இருந்து சென்னை நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள வைத்துள்ளது. அவர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைந்திடும் வகையில் இந்தப் பயணம் வெற்றியை நோக்கி நடை போடட்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி வாழ்த்துகிறது.
கொரானா காலத்தில் உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கிட மறுத்ததோடு, அவரது குடும்பத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் அபாண்டமான குற்றச்சாட்டுகளை வைத்த மருத்துவத்துறை இயக்குனர், பிறகு தவறான தகவல்களை வெளிப்படுத்தி விட்டதாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இன்னும் மருத்துவர் விவேகானந்தர் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவில்லை. இந்தப் போராட்டத்தின் மூலம் அதிலும் வெற்றி கிட்டும் என்று நம்புகிறோம்.
தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், செவிலியர்கள் போன்று பல்வேறு துறைகளில் உள்ளவர்களின் நியாயமான கோரிக்கைகள் தீவிரப் போராட்ட வடிவம் எடுப்பதற்கு முன்பு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
பா குமரய்யா,
மாநிலப் பொதுச் செயலாளர், காமராஜர் மக்கள் கட்சி
