70ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட “ரெக்ஸ் தியேட்டர்- மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை
16/06/2025
காரைக்கால் நகரின் மைய பகுதியில் ஏறக்குறைய 70ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட “ரெக்ஸ் தியேட்டர்” அதன் குத்தகைகாலம் முடிந்த பின் நகராட்சி வசம் வந்த பின் நீண்ட காலம் பயன்பாடு அற்ற நிலையில் இருந்தது.
அதன் பின் பல லட்ச ரூபாய் செலவில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி “டணால் தங்கவேல் கலையரங்கம்” என்ற பெயருடன் கட்டிடத்தை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்கள். நகராட்சி வருமானத்தை பெற்று வந்தது.ஒரு கட்டிடத்தின் கட்டமைப்பு, ஒருமைப்பாடு, பாதுகாப்பு இவைகளை உறுதிப்படுத்த பராமரிப்பு அவசியம். அதை நகராட்சி நிர்வாகம் செய்ய தவறியதால் கலையரங்கம் அலங்கோலப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.
மண்ணின் மைந்தர் நடிகர் டணால் தங்கவேல் பெயர் சூட்டி இருந்தார்கள், அந்த பெயர் பலகை கூட தற்போது இல்லை.4டன் ஏ.சி 8உள்ளது பயன்பாடு இல்லாத நிலையில்,
கதவுகளும், இருக்கைகளும் கரையான் அரித்த நிலையில் உள்ளதோடு, கலையரங்கம் வாசலில் ஆள் உயரத்திற்கு கரையான் புற்று வளர்ந்து உள்ளது.
சுற்றிலும் செடி கொடிகள் காடுபோல் அடர்ந்து காணப்படுகின்றன. அக்கட்டிடத்தை குத்தகைக்கு கொடுத்தால் மக்கள் பயன்பாட்டுக்கு வருவதுடன், நகராட்சிக்கு வருமானமும் கிடைக்கும். மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கிறது.
