கூட்ட நெரிசல் மரணங்களுக்கு முற்றுப்புள்ளியே கிடையாதா?
10/06/2025
கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில், ஆர்சிபி அணியின் ஐபிஎல் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.
ஐபிஎல் வரலாற்றில் 18 ஆண்டுகளில் முதன்முறையாக ஆர்சிபி கோப்பையை வென்றது ஒரு முக்கியத் தருணம்தான் என்றாலும், அந்த அணியினர் பெங்களூரு திரும்பியதும் வெற்றிக் கொண்டாட்டம் என்ற பெயரில் ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் கூடியது இந்த அசம்பாவிதத்துக்கு வழிவகுத்திருக்கிறது. ஜூன் 4 அன்று ஆர்சிபி அணி ஊர் திரும்பிய கையோடு சட்டமன்றத்துக்குச் சென்று முதல்வரைச் சந்திப்பது என்று திட்டமிடப்பட்டது. பின்னர், சின்னசுவாமி கிரிக்கெட் மைதானத்தில் கொண்டாட்ட நிகழ்வுக்கு கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. உண்மையில், அணியின் வெற்றிப் பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று பெங்களூரு போக்குவரத்துக் காவல் துறை சார்பில் ஜூன் 4 அன்று காலையிலேயே தெரிவிக்கப்பட்டுவிட்டது.

ஆனால், மாலை 5 மணிக்கு வெற்றிப் பேரணி நடத்தப்படும் என மாலை 3.14 மணி அளவில், ஆர்சிபி அணி தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்தது பெரும் கூட்டம் குவிய வழிவகுத்தது. இணையம் மூலம் அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர், மைதானத்திலேயே வழங்கப்படும் என மாற்றி அறிவிக்கப்பட்டது; அனுமதிச் சீட்டை வாங்குவதற்காக நேரடியாக ரசிகர்கள் குவியத் தொடங்கினர் எனக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
