“இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், காந்தியத்தை பின்பற்றி காமராஜர் வழி நடந்தவர், காலத்தை ஜீரணித்தவர் என்று காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்கள் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
9/4/2025
குமரி அனந்தனைப் போன்ற சிலர் காலத்தை ஜீரணித்து விடுவார்கள்
இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்களுடைய மறைவு , ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பு என்றுதான் நான் கருதுகிறேன். குறிப்பாக அரசியல் உலகத்திற்கு மட்டுமல்லாமல், இலக்கிய உலகத்திற்கும் அவருடைய இழப்பு மிகப் பெரிய இழப்பு என்பதை இந்த நேரத்தில் நான் உணர்கிறேன்.
1965-இல் பெருந்தலைவர் காமராஜர் முன்னிலையில், மதுரையில் பேசி காமராஜருடைய மனதைக் கவர்ந்து அதற்குப் பிறகு தீவிர காங்கிரஸ்காரராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கியவர் குமரி அனந்தன் அவர்கள். அந்த நேரத்தில் நான் பள்ளியில் படித்து முடித்து, பிறகு பியூசி வகுப்பையும் முடித்துவிட்டு, 1966 இல் மாநிலக் கல்லூரியில் சேர்ந்தேன். மாநிலக் கல்லூரியில் நான் சேர்ந்த அந்தக் காலச்சூழலில் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்துக் கல்லூரிகளிலும் குமரி அனந்தன் அவர்கள் வந்து பேச வேண்டும் என்று மாணவர்கள் தாகத்தோடு தங்கள் காதுகளை வைத்தபடி காத்திருந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் பெருந்தலைவர் காமராஜருடைய பெருமைகளை இளைய தலைமுறையிடம் அன்று கொண்டு போய் சேர்த்தவர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள்.
அவருடைய பேச்சைக் கேட்பதே ஒரு தனிப்பட்ட சுகானுபவம் என்று என்னால் சொல்ல முடியும். என்னை போன்று ஏராளமான மாணவர்களை பெருந்தலைவர் காமராஜரின் காலடியில் கொண்டு சேர்த்த பெருமை அவருடைய பேச்சுக்கு உரியது. அவர் வெறும் பேச்சாளர் மட்டும் இல்லை. இந்த தமிழ் சமூகத்தினுடைய நலனை நெஞ்சிலே நிறுத்தி, அதற்கு என்று இடையறாது பாடுபட்டவர். நாடாளுமன்றத்தில் தமிழ் ஒலிக்க வேண்டும் என்று முயன்று அதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர்.
தபால் துறையில் மணியார்டர் என்பதை நீங்கள் தமிழிலேயே, நாம் நிரப்பி அதை அனுப்புவதற்கான வழிக் கதவத்தை திறந்து வைத்தவர். கங்கையும் காவிரியும் இணைய வேண்டும் என்பதற்காக குமரி முதல் சென்னை வரை கால் கடுக்க நடந்தவர்.
காந்தியத்தை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கிராமம் தோறும் கொண்டு சேர்ப்பதற்காக குமரியில் இருந்து காந்தியினுடைய 98 வது பிறந்த நாளில் சென்னை வரையில் பாதயாத்திரை மேற்கொண்டவர். தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தொடர்ந்து பாதயாத்திரைகளை, ஏறக்குறைய ஒரு பத்து பன்னிரண்டு முறை அவர் நடத்தியதாக எனக்கு நினைவு.
எல்லா வகையிலும் தமிழைச் சிந்தித்து, தமிழரை சிந்தித்து தமிழ் தேசியம் என்று அவர் வெளிப்படையாக இயங்காமல் போனாலும், தேசியத் தமிழனாக இறுதிவரை வாழ்ந்தவர். ஒரு நல்ல காங்கிரஸ்காரராக மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். குறிப்பாக பெருந்தலைவர் காமராஜர் மீது ஈடற்ற அன்பைக் கொண்டவர்.
மகாத்மா காந்தியிடம் மனதைப் பறிகொடுத்தவர். காந்தியத் தத்துவங்களை காமராஜருடைய பாதையில் கொண்டு சேர்ப்பது ஒன்றுதான் தன் வாழ்வின் பணி என்று, இடையறாமல் முயன்ற அந்த மகத்தான மனிதரின் மூச்சு இன்றைக்கு நின்று இருக்கிறது.
அவர் உடலளவில் நம்மை விட்டு மறைந்தாலும், தமிழ் இருக்கின்ற வரையில், தமிழன் இருக்கின்ற வரையில், ஏதோ ஒரு வகையில் எங்கோ, ஒரு தமிழனால், எப்பொழுதும் அவர் நினைவு கூறப்படுவார். காலம் பலரின் மறைவை ஜீரணித்து விடும். ஆனால் குமரி அனந்தனைப் போன்ற சிலர் காலத்தை ஜீரணித்து விடுவார்கள் என்று தான் இந்த நேரத்தில் நான் சொல்ல விரும்புகிறேன்.
தமிழருவி மணியன்,
தலைவர்,
காமராஜர் மக்கள் கட்சி.
