காரைக்காலில் சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் கவர்னருக்கு காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை
காரைக்கால், 23/04/2025
காரைக்காலில் ரூபாய் 10 கோடி செலவில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு தற்போது முடங்கி கிடக்கும் சாலை அகலப்படுத்தும் பணியை, விரைந்து முடிக்க வேண்டும். காமராஜர் மக்கள் கட்சி பொதுச் செயலாளர் கவர்னருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.காமராஜர் மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ஏஎம் இஸ்மாயில் இதுகுறித்து கவர்னருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,கடந்த 2018ம் ஆண்டு, காரைக்கால் மாவட்டம் பூவம் முதல் வாஞ்சூர் வரை உள்ள நெடுஞ்சாலையை தற்போதைய நிலையிலிருந்து இருபுறமும் தலா 1.5மீட்டர் அகலப்படுத்தி, மேம்படுத்த ரூபாய் 10கோடியில் திட்டப்பணி தொடங்கப்பட்டது. ஆனால் இப்பணி கடந்த ஆறு ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று தற்போது முற்றிலும் முடங்கிய நிலையில் கிடைக்கிறது.
சாலையின் மொத்த நீளத்தில் 40 சதவீதம் மட்டுமே அகலப்படுத்தி உள்ளார்கள். மீதி பகுதிகள் அனைத்தும் பள்ளமும் படுகுழியாக காட்சியளிக்கிறது. நெடுஞ் சாலையில் கூட சில பகுதிகள் சிதிலமடைந்து பள்ளங்களாக உள்ளது. குறிப்பாக ஓஎன்ஜிசி, தனியார் துறைமுகத்திலிருந்து அதிக எடைகளுடன் வரும் கனரக வாகனங்களால், சாலையில் உள்ள சிறிய பள்ளங்கள் அதன் அழுத்தத்தால் பெரிதாக மாறி போகிறது மேலும் எதிரே தொடர்ந்து வரும் கனரக வாகனங்களுக்கு வழி விடும் போது சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளங்களில் வாகனத்தை இயக்க வேண்டிய நிலையில் மரண பயத்துடன் பயணிக்க வேண்டிய நிலையில் வாகன ஓட்டுனர்கள் உள்ளனர். இரவு நேரத்தில் வெளியூரிலிருந்து வரும் வாகனங்கள் சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கி கொள்கிறார்கள். மேலும் நாளுக்கு நாள் சாலையின் அகலம் குறைந்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 10கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட இத்திட்டம் பணி நிறைவு பெறாதது ஏன் என்பது கேள்வி குறியாக உள்ளது. எனவே புதுச்சேரி கவர்னர் இந்த விஷயத்தில் தீர விசாரித்து 6 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
