துருப் பிடித்த ஆயுதத்துடன் கபட நாடகம்
16/04/25
புத்தகப் பைகளில் அரிவாள்கள்; தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஊழலின் கறைபடியாத அரசுத் துறைகளே இல்லை. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப் பலன்கள் வழங்க முடியாத நிலையில் அரசு நிறுவனங்கள் உள்ளன. மதுப்பழக்கத்தால் நடைபெறும் பாலியல் பிறழ்வுகளுக்கும், கொலைகளுக்கும் அளவே இல்லை.

அமைச்சர் பதவியில் ஒரு அருவருக்கத்தக்க மனிதர் உட்கார்ந்து கொண்டு சமயக் குறியீடுகளை மலினப்படுத்தி, பெண் மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிக் கொண்டு இருக்கிறார். அவர் கட்சிப் பதவியை பறித்தால் மட்டும் போதும் என்று, இன்னும் அவரை அமைச்சராக வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார் முதல்வர்.
வகைதொகை தெரியாமல் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, பலவற்றை நிறைவேற்றி விட்டோம் என்று உண்மைக்கு மாறாகப் பேசிக் கொண்டு உலா வருகிறார், முதல்வர். உள்ளாட்சித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தாமல் போக்கு காட்டி வருகிறார்.

இப்படி தமிழகத்தின் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து விட்டதால், வானமேறி வைகுண்டம் போவதற்கு வழி தெரியாதவன் கூரை ஏறி கோழி பிடித்த கதையாக, மத்திய காங்கிரஸ் ஆட்சியில் வளமான துறைகளை வைத்துக் கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்த காலத்தில் முன்னெடுக்க வேண்டிய விவகாரங்களை, தற்போது தூக்கம் கலைந்தவராய், 1969 இல் கண்டுபிடித்த மாநில சுயாட்சி என்ற ஒரு துரு பிடித்த ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, நீதிபதி ஜோசப் தலைமையில் ஒரு குழு அமைத்து கபட நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார், திராவிட மாடல் முதல்வர்.
முதல்வர் அவர்களே! இன்னும் அதிகாரங்களைப் பெறுவது ஒருபுறம் இருக்கட்டும். தற்போது தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி தமிழகத்தை செம்மையாக நிர்வகிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுங்கள்; இல்லையேல் தமிழக அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் குறிப்பிட்டது போல் தாங்கள் ஏற்கனவே “சிறப்பாக” செயல்பட்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எதிர்வரும் தேர்தலில் மக்கள் தங்களுக்குத் தவறாமல் அளிக்கக் கூடும் என்று காமராஜர் மக்கள் கட்சி சுட்டிக் காட்ட விரும்புகிறது.
பா குமரய்யா,
மாநிலப் பொதுச் செயலாளர்,
காமராஜர் மக்கள் கட்சி.