மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி கரைக்கப்பட்ட தேனி மாவட்டம் சுருளி அருவி அருகில் நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசிற்கு காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை!
25/04/2025
தேசப்பிதா காந்திஜி அவர்கள் 1948 -ஆம் ஆண்டு மறைந்த பொழுது அவரது அஸ்தியை இந்தியா முழுவதும் உள்ள கடல்கள் மற்றும் பல்வேறு ஆறுகளில் கரைக்கப்பட்டன. அப்பொழுது ஒன்றுபட்ட மதுரை மாவட்டம் தற்போது மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு தேனி மாவட்டம் கம்பத்தில் அமைந்துள்ள முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யக்கூடிய முக்கிய அருவியான சுருளி அருவியில் காந்திஜியின் அஸ்தியை 1948-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் கரைக்கப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அழகில் உள்ள சுருளியாற்றின் பெருமைகளை அன்றைய மதுரை மாவட்டத்தின் தேசிய தலைவர்களாக விளங்கிய பெரு மதிப்பிற்குரிய திரு. என். ஆர். தியாகராஜன், திரு என். எம்.ஆர். சுப்புராமன் ஆகியோரின் பெரும் முயற்சியால் சென்னையில் இருந்து ரயில் மூலம் ராமேஸ்வரம் கடலில் கலக்க கொண்டு செல்லப்பட்ட மகாத்மா காந்திஜி அஸ்தியின் ஒரு பகுதி சுருளி அருவியில் கரைக்கப்பட்டது.1948-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி மகாத்மா காந்திஜியின் அஸ்தி கரைக்கப்பட்ட இடம் இன்று பராமரிப்பு இன்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க காந்திஜியின் அஸ்தி கரைக்கப்பட்ட சுருளி ஆற்றின் கரையில் மகாத்மா காந்திஜி அவர்களுக்கு நினைவு மண்டபம் அமைத்து அதில் மகாத்மாவின் வரலாற்றுச் செய்திகள் மற்றும் புகைப்பட கண்காட்சிகளை அமைத்திட வேண்டுமென தமிழக அரசை காமராஜர் மக்கள் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
